தன்னிலை அறியாமை
நண்பர் ஒருவருக்குக் கொஞ்சநாட்களாகவே தன் மனைவியின் கேட்கும் திறனில் குறை இருப்பதாகச் சந்தேகம். அவளுக்கு ஒரு கேள்உதவிக் கருவி (Hearing Aid) வாங்கிக் கொடுக்கலாமா என நினைத்தார் ஆயினும் தனது சந்தேகத்தை அவளிடம் எப்படிக் கூறுவது என்பதில் சற்று யோசனை செய்தபின் தனது குடும்ப வைத்தியரின் உதவியை நாடலாம் என முடிவுசெய்தார். வைத்தியரும் அவரது சங்கடத்தை அறிந்து அதற்கு ஒரு மிகவும் லேசான ஒரு பரிசோதனையைச் செய்யலாம் எனவும் அதனை அவரே வீட்டில் செய்து பார்க்கலாம் எனவும் கூறி பின்வருமாறு செய்துபார்க்கச் சொன்னார்.
முதலில் ஒரு 40 அடி தூரத்தில் நின்று சாதாரண குரலில் அவளிடம் ஏதாவது ஒரு கேள்வியைக் கேட்டுப்பாருங்கள். அது கேட்காவிட்டால் பின் தூரத்தை 30 அடி, பின் 20, 10 எனக் குறைத்துக் கொண்டே வந்து அதே கேள்வியைக் கேளுங்கள். உங்கள் கேள்வி மனைவிக்குக் கேட்கும் வரை இப்படியே தூர அளவைக் குறைத்துக் குறைத்துச் செய்து பாருங்கள். அப்பொழுது அவளுக்கு எவ்வளவு பாதிப்பிருக்கிறது எனத் தெரியவரும் என்றார்.
அன்று மாலை வைத்தியர் குறிப்பிட்டதைப் பரீட்ஷித்துப் பார்ப்பதற்காக சுமார் 40 அடி தூரத்திற்குப் போய், சமையல் அறையில் வேலைசெய்துகொண்டிருந்த மனைவியிடம் சாதாரணமான குரலளவில் ‘இன்று இரவு என்ன சாப்பாடு?’ என்று கேட்டார். பதில் எதுவும் வரவில்லை.
பின் 30 அடி தூரத்தில் நின்று கேட்டார். அப்போதும் பதில் வரவில்லை. பின் வைத்தியா; கூறியபடி 20 அடி, 10 அடி என்று குறைந்த தூரத்தில் நின்று கேட்டுப்பார்த்தார். எதற்கும் பதில் வரவில்லை.
மிகவும் வேதனையுடன் சமையலறைக்கு உள்ளேயே சென்று அவளின் அருகில் நின்று மீண்டும், ‘ஆமா, இன்று இரவு என்ன சாப்பாடு?’ என்று கேட்டாh;.
அவள் முகம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது. அவள் கூறினாள், ‘என்ன இது. இப்போ ஐந்தாவது தரமாகக் கூறுகிறேன், இரவுச் சாப்பாடு ‘சிக்கன் குருமா’ !
அறியும் பாடம்: குறை மற்றவர்களிடம்தான் இருக்கும் என்று நாம் சந்தேகப்படுவதற்கு முன் எம்மை நாம் பரீட்சித்துக் கொள்ளவேண்டும்.
நன்றி – இணையதளம்.
No comments:
Post a Comment